tamilnadu

img

சிந்தனையை தடுக்க முடியாத சிறைக்கம்பிகள்

மனிதன் தனது மதிப்பைப் பற்றிய உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக தான் உணர முடிந்துள்ளது. இத்தகைய உணர்வு பௌதீகரீதியான உடல் தேவைகளிலிருந்து பிறப்பதல்ல. மாறாக, அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிறக்கிறது. முதலில் ஒரு சிலரும், பிறகு அனைத்துச் சமூக வர்க்கங்களும் இதைப் பெறுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட சமூக உண்மைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, ஒடுக்குமுறை கட்டமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் புரிந்து கொண்டவர்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு புரட்சிக்கு முன்பும், சமூகம் பற்றிய விமர்சனம்,பண்பாட்டு மாற்றங்கள் ஆகியன தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதாகும்.


இத்தாலியின் மிலான்நகர் சிறைச்சாலையை நோக்கி அந்த ரயில் புறப்பட்டது. பகலில் கொடூரமான வெயில், இரவில் ரத்தத்தை உறைய வைக்கும் கடும் குளிர். ரயிலில் எந்தவிதமான அடிப்படைவசதியும் இல்லை. குளிக்கவும் முடியாது. நல்ல நீரை குடிக்கவும் முடியாது. ஆடுமாடுகளைப் போல் மோசமான முறையில் நடத்தப்பட்டார். கடுமையான வயிற்று வலி, உடல் முழுமையும் தடிப்புகள், சிறு நீரகக் கோளாறு.மோசமான காய்ச்சல், ஜீரணசக்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், பன்னிரெண்டு பற்கள் விழுந்துவிட்டன. கை விலங்குகள் மாட்டப்பட்டு, கூன் விழுந்த அந்த மனிதர் 19 நாட்கள் தொடர்ந்து ரயிலில் பயணம்செய்து சிறைச்சாலையை அடைந்தார். தன்னைப் பற்றியேசிந்திக்கும் மனிதர்களுக்கிடையில், தன் தேசத்து மண்ணைப் பற்றி மட்டுமே சிந்தித்த மகத்தான மனிதர்.முசோலினியின் பாசிச அரசு, அவருக்கு வழங்கிய பரிசு 20 ஆண்டுகள், 4 மாதங்கள், 5 நாட்கள் சிறைத்தண்டனை.அவர்தான் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அந்தோணியோ கிராம்ஷி.பலத்த இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முசோலியின் இராணுவத் தளபதியை கொண்ட சிறப்புநீதிமன்றம் கடுமையான விசாரணையை 1928 மே 28 முதல் ஜூன் 4 வரை நடத்தியது. பாசிசத்திற்கு எதிராகபோர்க்குரல் எழுப்பிய, சமரசமற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்திய கம்யூனிசத் தலைவர்கள் விசாரிக்கப்பட்டனர். தீரா வன்மத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அரசு வழக்கறிஞர். நாட்டில் சீர்குலைவு வேலைகளை செய்யக்கூடியவர். சட்டம்- ஒழுங்குக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடியவர். அரசாங்கத்திற்கு எதிராகசதி செய்யக்கூடியவர். உள்நாட்டுப் போரை தூண்டிவிடக் கூடியவர். வர்க்க வெறுப்பை மூட்டிவிடக்கூடியவர். குற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேசக்கூடியவர் என்பவை அவை. இறுதியாக கேட்கிறேன். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, தளபதியே! ராணுவத் தன்மை வாய்ந்த எல்லாசர்வாதிகாரிகளுமே இன்றோ, நாளையோ தூக்கியெறியப்பட்டு சர்வாதிகாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று நான் நம்புகிறேன். அப்படி நிகழும் போது பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கத்தை அகற்றிவிட்டு, அதிகாரத்தின் கடிவாளங்களை கையிலெடுத்துக் கொண்டு தேசத்தை மீண்டும் நிர்மாணிக்கும் என்றார் கிராம்ஷி.

ஜியோவானி ஜியோலிட்டி என்பவர் 1904ஆம் ஆண்டுகளில் இத்தாலியின் பிரதமராக இருந்தார்.சோசலிச கருத்துக்களுக்கும், அதன் இயக்கத்தினருக்கும் பரமஎதிரியாக தன்னைப் பிரகடனப்படுத்தியவர். இத்தாலியின் தென் பகுதியிலிருந்த சார்டினியாத் தீவில் 1904 முதல் 1910 வரை பல்வேறு போராட்டங்கள். சுரங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள், பலதரப்பு மக்களின் போராட்டங்களை சார்டினியா சந்தித்தது. 1910 இத்தாலி லிபியாமீது போர் கொடுத்த காலம். லிபியப் படையெடுப்பால் போர்ச்செலவுகள் அதிகமாயின. விலைவாசி தற்பொழுதுஇந்தியாவில் ஏறுவதைப் போல விஷம் போல் ஏறியது.தொழிலாளர்கள் திரண்டனர். மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. டூரிங் நகரத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் தாக்கத்தை தேசம் முழுமையும் ஏற்படுத்தியது. தன் சகோதரர் ஜென்னாரோ, ஆசிரியர்ராஃபா கார்சியா, இத்தாலி கம்யூனிஸ்ட் தலைவர் பல்மிரோ டோக்ளியாட்டி ஆகியோருடன் நடத்திய விவாதங்களும், தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் தாக்கத்திலும், கல்லூரிப் படிப்பில் இருந்த கிராம்ஷியின் அரசியல் பார்வையில் தீர்மானகரமான முடிவுக்கு வர வழி வகுத்தது. அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார்.எல்லாவற்றிக்கும் மேலாக மனிதன் ஒரு மணம்; ஒருபிரக்ஞை; அதாவது அவன் வரலாற்றின் விளை பொருள்தானேயன்றி இயற்கையின் விளை பொருளல்ல. சுரண்டுவோர், சுரண்டப்படுவோர், செல்வத்தைப் படைப்போர், தன்னலத்துடன் அதை நுகர்வோர் ஆகியோர் எப்போதுமே இருந்து வந்துள்ளனர். எனினும் சோசலிசம் ஏன் ஏற்கனவே உருவாகவில்லை என்பதை விளக்குவதற்கு வேறொரு வழியுமில்லை. மனிதன் தனது மதிப்பைப் பற்றிய உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக தான் உணர முடிந்துள்ளது. இத்தகைய உணர்வு பௌதீகரீதியான உடல் தேவைகளிலிருந்து பிறப்பதல்ல. மாறாக, அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிறக்கிறது. முதலில் ஒரு சிலரும், பிறகு அனைத்துச் சமூக வர்க்கங்களும் இதைப்பெறுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட சமூக உண்மைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, ஒடுக்குமுறை கட்டமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் புரிந்துகொண்டவர்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு புரட்சிக்கு முன்பும், சமூகம் பற்றிய விமர்சனம்,பண்பாட்டு மாற்றங்கள் ஆகியன தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதாகும்.

பண்பாடு என்பது முற்றிலும் வேறானது. அது ஒருவன்தனது ஆன்மாவை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்துவது. ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளுவது, உயரிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.வரலாற்றில் தான் வகிக்கும் இடம், வாழ்க்கையில் ஆற்றவேண்டிய பணி, தனக்குள்ள கடமைகள், உரிமைகள்ஆகியவற்றை அவன் புரிந்துகொள்ள உதவக்கூடியதாகும் என்றார். கல்லூரி நாட்களுக்குப் பிறகு ‘புதியஅமைப்பு’ என்ற பத்திரிகையில் கட்டுரைகள், கலை,இலக்கியம், பண்பாடு குறித்த குறிப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து எழுதினார்.1917 ரஷ்யப்புரட்சிக்கு பிறகு உலகமெங்கும் அதன் தாக்கம் எழுந்த நேரம். இத்தாலியிலும் அதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. தொழிற்சாலை கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை அதிகாரமாக தொழிற்சாலை கவுன்சில்கள் செயல்படும் என்று கிராம்ஷி எழுதினார். புதிதாக உருவான சோசலிச நாடுகளை ஒழிப்பதற்கென்றே 144 முதலாளித்துவ நாடுகள் களத்தில் இறங்கின. இதை எதிர்த்த போராட்டம் இத்தாலியிலும் நடைபெற்றது.கிராம்ஷி முதன்முறையாக கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.இத்தாலி சோசலிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக செயல்பட்ட கிராம்ஷிக்கும் கட்சி தலைமைக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாசிசத்தை பற்றி, சர்வதேசநிலைமையை புரிந்து கொள்வது பற்றி, தீவிர இடதுசாரிக் கொள்கைகள் பற்றி, மாற்றத்திற்கான நடைமுறை தந்திரங்களை உருவாக்குவது பற்றியே கருத்து மாறுபாடுஏற்பட்டது. 1920 மாஸ்கோவில் மூன்றாவது கம்யூனிஸ்ட்அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. கட்சி புனரமைப்பு குறித்த கிராம்ஷியின் கருத்திற்குலெனின் ஆதரவு தந்தார். கிராம்ஷியின் கருத்துக்களோடு லெனின் உடன்பட்டிருந்தார். கருத்து வேறுபாடுகளின் இறுதியாக சோசலிஸ்ட் கட்சியிலிருந்து விலகி 1921ல்இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. 1922ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக கிராம்ஷி பங்கேற்றார்.

‘முன்னேறுக’ என்ற சோசலிசப் பத்திரிகையின் ஆசிரியராக, இளம் புரட்சியாளராக தனது அரசியல் பயணத்தை துவக்கியவர் தான் முசோலினி. அதே முசோலினியால் 1919ல் பாசிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. அரசுஆதரவுடன் பாசிஸ்ட் வெறியாட்டம் நடந்தது. 1922ல் அதிகாரத்திற்கு வந்த முசோலினியால் ஜனநாயக சக்திகள் அனைத்தும் நசுக்கப்பட்டன. எல்லை தாண்டுவோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசை எதிர்த்தவர்கள் இத்தாலியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பத்திரிகைகள் மிரட்டப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் மாட்டியோட்டி என்பவர் முசோலினியைத் தாக்கி பேசியதால் கொலை செய்யப்பட்டார். சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தாக்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். முசோலினியின் காட்டுதர்பார் இரண்டாம் உலகப் போர் முடியும்வரை தொடர்ந்தது. பாசிசத்திற்கு எதிராக கிராம்ஷியின் கடுமையான முயற்சியால் சோசலிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் இணைந்த கூட்டு கமிட்டி உருவாக்கப்பட்டது. இதையடுத்து கிராம்ஷிக்கு கைது வாரண்ட் பிறக்கப்பட்டது. அதனால் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின்வழிகாட்டுதல்படி ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் தங்கி, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை வழி நடத்தினார்.பாசிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே முன்வந்தனர். சிலர் பாசிசத்தோடு சமரசம் செய்து கொண்டனர். பாசிசம் தன்கூட்டாளிகளுக்குச் சம உரிமைகள் வழங்காது, அதனுடைய அமைப்பும் அதற்கு இடம் கொடுக்காது. பாசிஸ்ட்டுகளுக்கு தேவை விலங்குகள் பூட்டப்பட்ட அடிமைகள் தான் என்றார் கிராம்ஷி. இந்தச் சமயத்தில்இத்தாலி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.கிராம்ஷி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யக்கூடாது என சட்டம் இருந்தது. 1924ல் வியன்னாவிலிருந்து இத்தாலி புறப்பட்டார் கிராம்ஷி. பாசிசம் இத்தாலிய சமூகத்தின் சீரழிவைக் குறிக்கும் ஒரு அரசியல் போக்காகவே மாறியிருந்தது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை நடத்தினார். 1925 மே 26 அன்று நாடாளுமன்றத்தில் முசோலினியும், கிராம்ஷியும்நேரடியாக மோதினர்.

நீங்கள் அரசை வென்றுவிடலாம். சட்டப்புத்தகங்களை மாற்றி எழுதிவிடலாம். இந்நாள் வரை எந்தெந்த வடிவங்களில் அமைப்புகள் நிலவி வந்தனவோ அந்தந்தவடிவங்களில் தொடர்ந்து அவை நிலவாமல் செய்து விடலாம். ஆனால் உங்களின் நடவடிக்கைகள் கூட நிர்ணயிக்கிற யதார்த்த நிலைமைகளை வெற்றி கொண்டு விடலாம் என கனவு காணாதீர்கள். இந்த தேசத்தின் புரட்சிகர சக்திகளை யாராலும் ஒருபோதும் தகர்த்துவிட முடியாது. பாசிஸ்டுகளே! உங்கள் தீய கனவுகள் ஒருபோதும் நனவாகிவிடாது என கர்ஜனை செய்தார் கிராம்ஷி.அவரது நாடாளுமன்ற உரையின் முதல் பேச்சும், கடைசிப் பேச்சும் இதுதான். அவரது பேச்சிற்காக முசோலினி கை குலுக்க முயன்றார். இரும்புக் கரத்தோடு கம்யூனிஸ்ட் கரம் கை குலுக்க மறுத்தது. இவரை வெளியேவிட்டால் பேராபத்து என பாசிசம் உணர்ந்தது. 1926 நவம்பர் 26 இரவு 10.30 மணியளவில் கிராம்ஷி கைது செய்யப்பட்டார்.32 குறிப்பேடுகள், 2848 பக்கங்கள், தட்டச்சில் 4000பக்கங்கள் ஆகியவற்றை சிறைச்சாலையில் இருந்த படியே கிராம்ஷி எழுதினார். ஆனால் சிறைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகே அவர் எழுத அனுமதிக்கப்பட்டார். அரசு என்பது தனது ஆட்சியை வன்முறை,அடக்குமுறை, பலவந்தம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக இந்த வன்முறைக்கான ஒப்புதலை, இசைவை, ஏற்பை அது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. தனதுமேலாண்மைக்கான செல்வாக்கை அது மக்கள் மத்தியில்ஏற்படுத்திக் கொள்கிறது என்றார்.

சிறை அதிகாரியின் தணிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மறைமுகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். லெனினை ‘இலியச்’ என்றும், வர்க்கங்களை ‘சமூக குழுக்கள்’ என்றும், செயல் திட்டத்தை ‘நவீன இளவரசன்’ என்றும், மார்க்சியத்தை ‘நடைமுறையின் தத்துவம்’ என்றும் குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்துப்பணிக்கு சிறையில் காவலர்களால் தொடர்ந்து இடையூறுகள் செய்யப்பட்டது. சிறிது நேரம் கூட தூங்க விடாமல்பெரும் ஒலி எழுப்பி தூக்கத்தைக் கொடுத்தனர். அவர் எழுதிய குறிப்புகள் அனைத்தையும் பாதுகாத்தவர் அவருடைய மனைவியின் சகோதரி டாட்டியானா. 1937 ஏப்ரல் இறுதியில் அவருடைய தண்டனைக் காலம் முடிகிறது. பாசிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த 10ஆம்ஆண்டு நிறைவு விழாவையொட்டி அவருடைய தண்டனை 12 வருடங்கள் 4 மாதங்களாக குறைக்கப்பட்டிருந்தது. சிறையிலிருந்து தப்பிக்க வைக்க கட்சி முயற்சித்தது. ஆனால் வேறு சிறைக்கு மாற்றப்பட்டதால் இயலவில்லை. கிராம்ஷியை விடுதலை செய்யக்கோரும் போராட்டம் தேசமெங்கும் நடந்தது. தொழிலாளர்கள் தங்கள் ஆலைகளில் விடுதலை செய்யக்கோரும் வாசகங்களை தினந்தோறும் எழுதினர். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் அவரது விடுதலைக்கான இயக்கம்நடப்பதை ஆதரித்தது. போதிய மருத்துவ வசதி இல்லை.பற்கள் அனைத்தும் விழுந்தன. காசநோய் பாதிப்பால்முதுகெலும்பு அரித்துக் கொண்டிருந்தது. முதுகு தசைகளில் சீழ்க்கட்டிகள். ரத்த நாளங்கள் தடித்துவிட்டன. ஒரு புழுவைப்போல் துடித்தார். இருப்பினும் மன உறுதிதளரவில்லை. இச்சூழலிலும் எழுதிக் கொண்டேயிருந்தார். சிந்தித்து கொண்டேயிருந்தார். விசாரணையின் போது ராணுவ நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்னார். “இவரது மூளையின் செயல்பாட்டை தடுத்துநிறுத்த வேண்டும்.”

அவரது விடுதலையை உலகம் முழுமையும் ஆவலுடன் எதிர்பார்த்தது. 1927 ஏப்ரல் 30ஆம் தேதி விடுதலை செய்யப்பட வேண்டும். மூன்று நாட்களுக்கு முன்பாக ஏப்ரல் 27 காலை 4.10 மணிக்கு அவர் ரத்த நாளங்கள் வெடித்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுஅவருக்கு வயது 46. அவரது மரணம் இயற்கையானதல்ல என்று சந்தேகம் ஏற்பட்டது. பாசிஸ்ட்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? அவர் சிறைச்சாலையில் இருந்தபொழுது அவரது தாய் இறந்தார். தாயின் இறப்புச் செய்தியை அவர் இறக்கும் வரை தெரிவிக்கவேயில்லை. தன் மனைவியையும். இரண்டு மகன்களையும் பார்க்க முயன்றார். அவரது கைதுக்கு பிறகு அவர்கள்மாஸ்கோவில் இருந்ததால் கடைசி வரை பார்க்க முடியவில்லை. தம்பி கார்லோவும், மனைவியின் சகோதரிடாட்டியானாவும் மட்டுமே உடலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவரது இறப்புச் செய்தியைக் கேட்ட இரண்டு வாரங்களிலேயே அவரது தந்தை மரணமடைந்தார். கிராம்ஷி இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு 1957ல் தான்அவரது சிறைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன.ஏழு வயதிலேயே கூன் விழுந்த உடல், கூன் நிமிர்வதற்கு தினமும் சில மணி நேரம் வீட்டின் விட்டத்தில் தொங்க விடப்படுவார். வறுமையில் வாடிய குடும்பம். படிப்பதில் ஆர்வமுள்ள அவரால், அரசியல் காரணங்களுக்காக தன் தந்தை சிறைப்பட்ட நிலையில் 11 வயதிலேயே பதிவாளர் அலுவலகத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். தந்தையின் விடுதலைக்கு பிறகு 1911ல் டூரிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றார். தந்தை பிரான்செஸ்கோ, தாய் பெப்பினோமர்சியாஸ், இரு சகோதரிகள், ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள்,ஐந்து பேரில் நான்காவது பிள்ளை அவர். தன் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் எந்த பெண்ணிடமும் காதல் வயப்பட்டதில்லை. ஆனால் மாஸ்கோவில் கிராம்ஷியை கவர்ந்தவர் ஜூலியா. வாழ்க்கை முழுமையும் தன் தேச நலனுக்காக, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக வாழ்ந்த அந்த மகான் 1891 ஜூன் 22ல் இத்தாலியின் சார்ட்டினியா தீவிலுள்ள அலெஸ் எனும் கிராமத்தில் பிறந்தார்.


இன்று (ஏப்.27) தோழர் கிராம்ஷி நினைவு நாள்

;